Saturday 14 October 2017

தமிழில் ஒப்பிலக்கியம்



தமிழில் ஒப்பிலக்கியம்
ஓர் இலக்கியத்துடன் காலம், வகை, உள்ளடக்கம் ஆகியவற்றுள் ஏதேனும் ஒருவழியில் தொடர்புடைய வேறு மொழியிலுள்ள இலக்கியத்தைக் குறிப்பிட்ட ஒப்பிலக்கியக் கோட்பாட்டின் வழி் செய்யப்படும் ஆராய்ச்சியே ஒப்பிலக்கியம்.ஒப்பிலக்கியம்என்பத னால் அது ஏதோ ஓர் இலக்கியம் என்று நினைக்கலாகாது. தாக்கக் கோட்பாடு, வகைமைக் கோட்பாடு, மையக்கருத்துக் கோட்பாடு போன்ற பலவற்றின் அடிப்படையில் இலக்கியங்களை ஒப்பிட்டு ஆராயலாம். இலக்கியத்தைப் பிற நுண்கலைகளுடன் அல்லது பிறதுறைகளுடன் ஒப்பிட்டு ஆராய்கின்ற ஆய்வுகளும் ஒப்பிலக்கியம் என்றே சொல்லப்படும்.
ஒப்பிலக்கியம் என்பது ஒருபுறம், தனது இலக்கியத்தோடு தனது நாட்டின் எல்லைக்கு அப்பாலுள்ள இன்னொரு இலக்கி யத்தை ஒப்பிட்டு ஆராய்தல் என்பதோடு, இலக்கியத்திற்கும், சிற்பம், கட்டிடக்கலை, இசை போன்ற கலைகள், அரசியல், பொருளாதாரம், சமூகவியல் மாதிரியான சமூக அறிவியல்கள், தத்துவம், வரலாறு, இவை போலுள்ள பிற அறிவுத்துறை களுக்குமான உறவுகளைக் கண்டு ஆராய்வதுமாகும். சுருக்கமாகச் சொன்னால், ஓர் இலக்கியத்தை இன்னொரு இலக்கியத்தோடு ஒப்பிடுவதும், இலக்கியத்தை மனித அனுபவத்தின் பிற துறை களோடு ஒப்பிடுவதும் ஆகும்.என்று ரிமாக் ஒப்பிலக்கியத்திற்கான வரையறையைச் சொல்லு கிறார்.
ஒப்பிடுவதன் நோக்கம், ஒன்றின் உயர்வையோ இன் னொன்றின் தாழ்வையோ சொல்வதற்காக அல்ல. மாறாக, இலக் கியத்தின் பொதுத் தன்மைகளையும் முழுமையையும் அறிவதே ஒப்பிலக்கியத்தின் இலட்சியம். ஏதேனுமொரு புறவயமான முறை யின் வாயிலாக எல்லா வித்தியாசங்களையும் மாறுபாடுகளை யும் கடந்துசென்று, இலக்கியத்தின் பொதுத்தன்மையைக் காண் பது தான் ஒப்பிலக்கியத்தின் நோக்கம்.
இன்றைக்கும் ஒப்பிலக்கியம் என்பது ஏதோ இரண்டு இலக்கி யங்களை ஒப்பிடுவது என்று நினைக்கும் கல்வித்துறை ஆய் வாளர்கள் உள்ளனர். இதுபற்றி பேராசிரியர் மருதநாயகத்தின் எச்சரிக்கை இங்கே குறிப்பிடத்தகும்.
இரண்டு நூல்கள் ஆங்கில மொழியில் இருக்குமானால் அவை யிரண்டும் இருவேறு பண்பாடுகளைச் சேர்ந்தவையாக இருந்தால் அவற்றை ஒப்பிடுதல் ஒப்பிலக்கியமாகும் என்பர். ஒரு நூலை எழுதியவர் இங்கிலாந்தைச் சார்ந்தவராகவும், மற்றதை எழுதி யவர் அமெரிக்காவையோ வேறு ஆங்கில மொழியைப் படைப் பிலக்கியத்தில் கையாளுகின்ற நாட்டையோ சார்ந்தவராகவும் இருக்க வேண்டும். பாரதி, பாரதிதாசன் ஆகியோருடைய கவிதை களை ஒப்பிடுவது திறனாய்வுத் துறையில் அடங்கும்; ஆனால் ஒப்பிலக்கியம் ஆகாது. அவர்களது நூல்கள் சார்ந்த தமிழ் இலக் கியம் ஒரே பண்பாட்டின் விளைவாகும். பாரதியையோ, பாரதிதாச னையோ ஈழத்தமிழ்க் கவிஞர் ஒருவரோடு ஒப்பிடுதல் ஒப்பிலக் கியமாக ஏற்றுக் கொள்ளப்படும். இவ்வேற்றுமையைப் புறக்கணித் தால் ஒப்பிலக்கியத்தின் தனித்தன்மை கெட்டுவிடும்.
இங்கு இன்னொரு தெளிவும் தேவை. ஏறத்தாழ சமகாலத்தைச் சேர்ந்த பாரதியார், பாரதிதாசன் ஆகியோரை ஒப்பிடுவது ஒப்பிலக் கியமாகாது. ஆனால் கபிலரையும் பாரதியாரையும் ஒப்பிடுவது ஒப்பிலக்கியம் ஆகுமா? இருவருமே தமிழ்ப்பண்பாட்டைச் சேர்ந்த வர்கள் என்று புறந்தள்ளுவதை விட, வெவ்வேறு காலப் பண்பாடு களைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களை ஒப்பிடுவது ஒப்பி லக்கியம் என்று கொள்ளலாம் என்று சிலர் சொல்கின்றனர். ஆனாலும் ஒப்பிடக்கூடிய பண்பாட்டுக்கூறுகள் வெவ்வேறாக இருந்தால் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.
ஒப்பிலக்கியம் தனிப்பட்ட ஒரு ஆய்வு முறை என்று சில ஆய்வாளர்கள் குறிப்பிடுவது சரியாகாது. ஒப்பிலக்கியம் ஓர் அவியல் ஆய்வுக்களம். எந்த முறையையும் எந்த நெறியையும் எடுத்துத் தன் நோக்கத்திற்கேற்பப் பயன்படுத்திக் கொள்ளவல்லது என்று தான் கூறமுடியும்.
ஒப்பிலக்கியத்தின் சாத்தியக்கூறுகளை ஜி.யு. போப் சுட்டிக் காட்டியிருக்கிறார். Tamil Heroic Poems என்று அவர் தம் நூலுக்குக் கொடுத்த தலைப்பே கைலாசபதியின் ஒப்பியலாய்வுக்கு முன்னோடியாக அமைந்தது. பிறகு எஸ். கிருஷ்ணசாமி ஐயங்கார் என்பவர் ஹோமரின் கதைப்பாடல்கள், புறப் பாடல்களோடு ஒப்புமை உடையன என்று சுட்டிக்காட்டினார். 1927இல் என்.கே. சித்தாந்தா என்பவர், Heroic Age of India என்னும் தமது நூலில், தமிழ்ப் புறப்பாடல்கள் வீரயுகப்பாடல்களைச் சேர்ந்தவை என்று சொல்லியிருக்கிறார். இக்கருத்தை வையாபுரிப்பிள்ளையும் தமது காவிய காலம் நூலில் ஏற்றுப் பாராட்டியிருக்கிறார்.
இவையெல்லாம் ஒப்பிலக்கியத்திற்கான சாத்தியப்பாடு பற்றிய குறிப்புகள். தமிழில் ஒப்பிலக்கியத்துக்கு ஒரு சிறிய பாரம்பரியம் இருக்கிறது.
ஒப்பிலக்கியத்தில் குறிப்பிடத்தக்க நல்ல பணியாற்றிய திறனாய்வாளர்கள் சிலர் தமிழில் உள்ளனர். முதன்முதலில் இதைத் தொடங்கிவைத்தவர் வ.வே.சு. ஐயர். அவர் தமது A Study of Kamban’s Ramayana என்ற நூலில் உலக மகா காவிய கர்த்தாக்கள் அனைவருடனும் கம்பரை ஒப்பிட்டு கம்பர் அவர்களையெல்லாம் விஞ்சும் உலகமகாகவி என்பதை நிறுவியுள்ளார். வ.வே.சு. ஐயருக்குப் பின் பலநாட்டுக் கவிதைக் கொள்கைகளையும் ஒப்பிடும் வகையில் அறிமுகப்படுத்தியவர் ரா.ஸ்ரீ. தேசிகன். சிலகாலத்துக்குப் பிறகு இத்துறையில் முயற்சிசெய்தவர் தொ.மு.சி. ரகுநாதன். அவர் பாரதியும் ஷெல்லியும் என்ற நூலை ஆக்கித் தந்தார்.
இதற்குப் பிறகு பெரும்பாலும் ஒப்பிலக்கிய ஆய்வுகளில் ஈடுபட்டவர்கள் தமிழ்ப் பேராசிரியர்களே. தனிநாயகம் அடிகள், சங்க இலக்கியத்தை கிரேக்க இலக்கியத்துடன் பலசமயங்களில் ஒப்பிட்டு நோக்கி யிருக்கிறார். தமிழின் இயற்கைநெறிக் கவிதை, கிரேக்க, இலத்தீன்மொழிக் கவிதைகளுடன் நெருங்கிய உறவுகொண்டிருப்பதை அவர் விளக்கியுள்ளார்.
அவருக்குப் பின் இத்துறையில் முயன்றவர் வை. சச்சிதானந்தன். The Impact of Western Thought on Bharati என்ற ஆய்வுநூல் பரந்த கவனத்தைப் பெற்றது. மேற்கத்திய ரொமாண்டிக் கவிஞர்களும் டென்னிசன், வால்ட் விட்மன் போன்றவர்களும் பாரதியிடம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தினார்கள் என்பதை விரிவாக இந்த நூல் ஆராய்ந்தது. பின்னர் அவர் Whitman and Bharati – A Comparative study என்ற நூலையும் ஆக்கினார். வேதாந்த இறையியல், உலக சகோதரத்துவம் ஆகிய நிலைகளில் இருவரையும் ஒப்பிடுகிறது அந்நூல்.
இச்சமயத்தில் ஒப்பிலக்கிய ஆய்வுக்கு உந்துசக்தியாக க. கைலாசபதியின் Tamil Heroic Poetry என்ற நூல் வெளிவந்தது. அவரே ஒப்பிலக்கியக் கொள்கைகளைத் தமிழில் விளக்குகின்ற ஒப்பியல் இலக்கியம்என்ற நூலை எழுதினார். அடியும் முடியும்என்னும் நூலிலும் ஒப்பிலக்கியம் பற்றிய இரு கட்டுரைகள் உள்ளன. மேலும் பாரதியை தாகூருடன் ஒப்பிட்டு இருமகாகவிகள்என்ற நூலையும் ஆக்கினார். இந்த நூலில் பாரதி, தாகூர் இருவருடைய பின்னணிகளும் ஒப்பிடப்பட்டு வெவ்வேறு நிலைகளில் இருவரும் மலர்ந்தமைக்கான காரணங்கள் ஆராயப்படுகின்றன. வாழ்க்கை வரலாற்று நிலையிலான ஒப்பியல் நூல் இது.பாரதியும் மேல்நாட்டுக் கவிஞர்களும்என்ற நூலையும் இவர் ஆக்கியுள்ளார்.
கா. சிவத்தம்பி, கிரேக்க நாடகங்களையும் தமிழ் நாடகங்களையும் ஒப்பிட்டு ஆய்வுசெய்துள்ளார்.
மார்க்சிய ஆய்வாளரான பேராசிரியர் எஸ். ராமகிருஷ்ணன், கம்பனையும் மில்டனையும் விரிவாக ஒப்பிட்டுக் கம்பனும் மில்டனும் என்ற நூலைப் படைத்தார். (பிறகு கம்பனும் மில்டனும்-ஒரு புதிய பார்வை). இந்நூல் மிகச்சிறந்த ஒப்பிலக்கிய நூலாகக் கருதப்படும் பெருமை வாய்ந்தது. கம்பராமாயணத்தையும் மில்டனின் துறக்க நீக்கத்தையும் (பேரடைஸ் லாஸ்ட்) விரிவாக ஆராயும் நூல் இது. இரு கவிஞர்களுக்கிடையிலும் காணப் படும் காவியக் கட்டுக்கோப்பு, பழைய காவியங்களின் செல்வாக்கு ஆகியவற்றை முதலில் சுட்டிக்காட்டுகிறார். பிறகு இலட்சிய நோக்கு, நிகழ்ச்சிப்போக்கு, திருப்புமையம், சிக்கல் அவிழ்ப்பு போன்ற தலைப்புகளில் இவ்விரு காப்பியங் களும் இணைந்து செல்லும் முறையை அழகாக விளக்கியுள்ளார். இந்நூலில் கதைமாந்தர்களின் ஒப்பீடு மிகச் சுவையானது. கைகேயியைக் கடவுளோடு (ஆதாமையும் ஏவாளையும் படைத்த திருத்தந்தை) ஒப்பிடுவதும், தசரதனோடு சாம்சனை ஒப்பிடுவதும், புதுமையல்லாமல் வேறு என்ன? இராவணனைச் சாத்தானோடு ஒப்புநோக்குவது எதிர்பார்க்கக் கூடியதே. சிலப்பதிகாரம் பற்றிய ஒப்பியல் ஆய்வுகளிலும் இவர் ஈடுபட்டார்.
பேராசிரியர் கோ. சுந்தரமூர்த்தி வடமொழி இலக்கியக் கொள்கை களையும் தொல்காப்பியக் கொள்கைகளையும் ஒப்பிட்டு ஒரு அருமையான நூல் எழுதியுள்ளார். சென்னைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பெ. திருஞான சம்பந்தம் என்பவரும் வடமொழி இலக்கியக் கொள்கைகளையும் தமிழ் இலக்கியக் கொள்கைகளையும் ஒப்பிட்டுள்ளார்.
கதிர். மகாதேவன், ஒப்பியல் நோக்கில் சங்ககாலக் கவிஞர்களையும், கிரேக்கக் கவிஞர்களையும் ஒப்பிட்டு ஆராய்ந்துள்ளார். தமிழர் வீரப்பண்பாடு’, ‘ஒப்பிலக்கிய நோக்கில் சங்ககாலம்’, ‘தொன்மம்ஆகியவை இவரது நூல்கள்.
தெ. பொ. மீனாட்சிசுந்தரனாரின் ஆய்வுமாணவரான க. செல்லப்பன், ‘ஒப்பியல் தமிழ்’, ‘எங்கெங்கு காணினும் சக்தி’, ‘ஒப்பிலக்கியம்-கொள்கைகளும் செயல்முறைகளும்’, ‘இலக்கியத்தில் பழம்புதுமையும் புதுப்பழமையும்’, ‘விடுதலைச் சிட்டும் புரட்சிக்குயிலும்ஆகிய பத்து நூல்களை எழுதியவர். Shakespeare and Ilango as Tragedians என்ற ஒப்பீட்டு நூலை எழுதினார். ஒப்பிலக்கிய நோக்கில் ஷேக்ஸ்பியரும் இளங்கோவும் எனத் தமிழில் அது வெளிவந்தது. பல ஒப்பியல் கட்டுரைகளையும் அவ்வப்போது வழங்கியுள்ளார். தொன்மவியல் ஆய்வு பற்றியும் எழுதியுள்ளார். இவருடைய ஒப்பீட்டுக்கு ஒரு சிறுசான்று:
வேதநாயகம் பிள்ளையின் புதினத்தில் செழிக்கும் தமிழ் உணர்வை தேசிய உணர்வின் முன்னோடியாகக் கருதவேண்டும். இதைத்தவிர, தலைவி ஆணுடையில் அரசுப்பொறுப்பை ஏற்கும்போதும் ஆனந்தமடத்தின் சாயலைக் காணலாம்….ஷேக்ஸ்பியரின் கதாநாயகிகள் போல் ஆனந்தமடத்தின் இறுதியிலும் ஞானம் பேசப்படுகிறது. ஆனந்தமடத்திலும், பிரதாப முதலியார் சரித்திரத்திலும் பாசிடிவிசம், என்லைட்டன்மெண்ட் ஃபிலாச
பியின் தாக்கம் தெரிந்தாலும் பிரதாப முதலியார் சரித்திரம் அவற்றை ஓரளவு கடந்து இந்தியக் கலாச்சாரத்தை வலியுறுத்துவதுபோல் தெரிகிறது.
இன்றைய கல்வித்துறைசார் ஒப்பியல் ஆய்வுக்கு வழிவகுத்தவர்களாக எஸ். இராமகிருஷ்ணன், வை. சச்சிதானந்தன் போன்ற முந்திய தலை முறையினருடன், க. செல்லப்பன், ப. மருதநாயகம், சிற்பி பாலசுப்பிரமணியம், பா. ஆனந்தகுமார் போன்ற இந்தத் தலைமுறையினரையும் கூறலாம்.
சிற்பி பாலசுப்பிரமணியன், கவிஞர். வானம்பாடி இயக்கத்தில் 1970இல் ஈடுபட்டவர்களில் ஒருவர். வானம்பாடிஎன்னும் விலையிலாக் கவி மடலையும், ‘அன்னம்விடு தூதுஎன்னும் பத்திரிகையையும் ஆசிரியராக இருந்து நடத்தினார். பாரதியார் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றியவர். கவிதை நூல்களன்றி, மொழி பெயர்ப்புகளும் இலக்கியத் திறனாய்வு நூல்களும் எழுதியுள்ளார். லலிதாம்பிகா அந்தர்ஜனம் எழுதிய அக்னி சாட்சிஎன்னும் மலையாள நாவலின் மொழி பெயர்ப்புக்காக சாகித்திய அகாதெமி பரிசு பெற்றவர். மீண்டும் இரண்டு ஆண்டுகள் கழித்து ஒரு கிராமத்து நதிஎன்னும் தமது கவிதைநூலுக்காகச் சாகித்திய அகாதெமி பரிசு பெற்றார். இலக்கியச் சிந்தனைஎன்ற விமரிசன நூலை எழுதினார், பாரதி-வள்ளத்தோள் கவிதைகளை ஒப்பீடு செய்து (A comparative study of Bharati and Vallathol) முனைவர் பட்டம் பெற்றவர். அவருடைய கட்டுரைகள் தொகுக்கப்பட்டு சிற்பியின் கட்டுரைகள்என்ற நூலாக வெளிவந்துள்ளன. சிற்பியைப் போலவே மலையாள-தமிழ்க் கவிதை ஒப்பீட்டில் ஈடுபட்ட இன்னொருவர் சாமுவேல்தாசன்.
பாலா, ‘பாரதியும் கீட்சும் என்னும் தமது சிறுநூலில் இருவரையும் ஒப்பிட்டுள்ளார். பாரதி முதலில் தெய்வத்தைக் காண்கிறார், அதில் அழகைக் காண்கிறார் என்றும் கீட்ஸ், முதலில் அழகைக் காண்கிறார், பிறகு அதில் தெய்வத்தைக் காண்கிறார் என்றும் விளக்குவது சுவையானது.
ப. மருதநாயகம், ‘கிழக்கும் மேற்கும்’, ‘திறனாய்வாளர் தெ.பொ.மீ.’ ‘மேலை நோக்கில் தமிழ்க்கவிதைபோன்ற பத்து நூல்களைத் தமிழில் வரைந்தவர். பல பல்கலைக்கழகங்களோடு தொடர்புடைய ஆராய்ச்சியாளர். கிழக்கும் மேற்கும்நூலில் தொல்காப்பியர், பாரதியார், பாரதிதாசன், அரவிந்தர், டி.எஸ். எலியட் ஆகியவர்களின் படைப்புகளை ஒப்பியல் நோக்கில் ஆராய்ந்துள்ளார். அ. அ. மணவாளனும் ஒப்பியல் துறையில் ஈடுபட்டுச் சில நூல்களைப் படைத்துள்ளார். அரிஸ்டாடிலின் கவிதையியலைத் தமிழில் மொழிபெயர்த்தவர் இவர்.
ஜி. ஜான் சாமுவேல், ஆசியவியல் நிறுவனத்தின் தலைவராகப் பணியாற்றியவர்.இலக்கிய ஒப்பாய்வுக் களங்கள்’, ‘இலக்கியத் திறனாய்வு முதற்பகுதி’, ‘திறனாய்வுச் சிந்தனைகள்’, ‘ஷெல்லியின் கவிதைக்கலை’, ‘ஷெல்லியும் பாரதியும்-ஒரு புதிய பார்வைபோன்ற பல நூல்களை எழுதி யுள்ளார். ஒப்பாய்வுக் களங்கள் என்ற நூல் ஒப்பிலக்கியக் கோட்பாடுகளை முதலில் தெளிவுபடுத்தி, பிறகு தமிழின் முக்கியமான காலகட்டங்களில்-வீரயுகம், அறநெறிக்காலம், பக்திக்காலம், சிற்றிலக்கியக் காலம், தற்கால ரொமாண்டிக் கவிதை இலக்கியம் போன்றவற்றின் இலக்கியங்களை எவ்வாறு ஒப்பிடலாம் என்பதை விளக்குகிறது.
பா. ஆனந்தகுமார், காந்திகிராமப் பல்கலைக்கழகத்தில் பணிபுரிபவர். மலையாளம், தெலுங்கு மொழிகளில் பட்டயப்படிப்புப் படித்தவர். இந்திய ஒப்பிலக்கியம்’, ‘பாரதி-ஆசான்-அப்பாராவ் கவிதைகளில் புனைவியல்’, ‘தெலுங்கு இலக்கிய வரலாறுபோன்ற நூல்களின் ஆசிரியர். இவருடைய இந்திய ஒப்பிலக்கியம் என்னும் நூலில், ஒரு சில தமிழ் இலக்கியாசிரியர்களை வேறுசில இலக்கியாசிரியர்களோடு ஒப்பிடும் சிறுசிறு கட்டுரைகள் அடங்கியிருக் கின்றன. இந்நூலின் முன்னுரையில் கா. சிவத்தம்பி, தமிழிலக்கியத்தின் அழகியல் என்பது தனியான ஒன்றா, அல்லது இந்திய அழகியல் கோட்பாட்டினுள் வரக்கூடியதா என்ற கேள்வியை எழுப்புகிறார். நமது இலக்கிய விமரிசனச் சிந்தனைகள் இத்துறையில் அதிகம் செல்லவில்லை என்பதையும் சுட்டிக் காட்டுகிறார்.
கன்னடம், தெலுங்கு ஆகிய மொழி இலக்கியங்களோடு தமிழ் இலக்கியங்களை டி. பி. சித்தலிங்கையா, டி. எஸ். சதாசிவம், மு. கு. ஜகந்நாதராஜா போன்றோர் ஒப்பிட்டுள்ளனர். பெ.சு. மணி எழுதிய சங்ககால ஒளவையாரும் உலகப் பெண்பாற்புலவர்களும்என்ற நூலும் நோக்கத்தக்கது. இராம. குருநாதன்சங்கப்பாட்டும் சப்பானியக் கவிதையும்என்ற நூலை எழுதி யுள்ளார். ஆ. ரா. இந்திரா என்பவர் மெய்ப்பாட்டு அடிப்படையில் கம்பரையும், ஹோமரையும் ஒப்பிட்டுள்ளார். ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, ஆதவன் போன்ற இக்காலப் படைப் பாளர்களையும் பிறமொழியினருடன் ஒப்பிட்டுச் சில ஆய்வுகள் வந்துள்ளன.
பொதுவாக, ஒப்பிலக்கிய ஆய்வுகள் ஆழமான திறனாய்வுகளாக மலரக் கூடிய வாய்ப்பு இல்லை. காரணங்கள் சில உண்டு.
ஒப்பிலக்கிய ஆய்வுக்குக் கொள்கை பலம் கிடையாது. அதாவது, ஒப்பிலக்கியத்துக்கெனத் தனிக்கொள்கை என்பது இல்லை. இன்னும் வெளிப்படையாகச் சொன்னால், ரொமாண்டிசிசம், புதுத்திறனாய்வு, அமைப்பியம், பின்னமைப்பியம், பின்-நவீனத்துவம் போன்றவை தனித்தனி உலகப் பார்வையையும் அது சார்ந்த இலக்கியப் பார்வையையும் கொண்டிருக்கின்றன. அப்படிப் பட்ட தனித்த கோட்பாடு எதுவும் ஒப்பிலக்கியத்திற்கு இல்லை.
இரண்டாவது, ஒப்பிலக்கியம் மொழிபெயர்ப்புகளை நம்பி உள்ளடக்கத்தை மட்டுமே ஒப்பிடுகிறது. வெறும் உள்ளடக்க ஆய்வு திறனாய்வு ஆகாது. ஒப்பிலக்கிய ஆய்வில் உள்ள முக்கியக் குறைபாடு இது. உருவத்தை ஒப்பிட வேண்டுமானால், அல்லது உள்ளடக்கம்-உருவம் இரண்டையும் சமஅளவில் உள்ள அங்ககக் கட்டாக நோக்கி ஆராய வேண்டுமானால், இருமொழியிலும் சமஅளவு புலமை பெற்றவராக இருக்கவேண்டும். ஆனால பொதுவாக ஒப்பிலக்கிய ஆய்வுகள் மொழிபெயர்ப்புகளை நம்பியே செய்யப்படுகின்றன. எனவே அவை திறனாய்வாக மலர்தல் மிக அரிது.
மூன்று, உருவம் பற்றிய ஆய்வு மிக அரிதாக இடம் பெற்ற போதிலும், அது உத்திகள்-உவமை-உருவகம்-நோக்குநிலை என்று பட்டியலிடும் போக்காக அமைந்து விடுகிறது. முழுமை நோக்கு முயற்சிகள், உருவத்துடன் உள்ளடக்கத் தைப் பொருத்திப் பார்க்கும் முயற்சிகள் குறைவு.
நான்கு, ஒப்பிடப்படும் நூல்களின் இலக்கியத் தரம் பற்றி நாம் ஏதும் அறிந்துகொள்ள முடிவதில்லை. எல்லா நூல்களும் மிகச் சிறந்த இலக்கிய நூல்களாகக் கருதியே ஆராயப்படுகின்றன.
அடுத்து, இந்நூல்களை இவற்றிற்குரிய இடத்தில் இலக்கிய வரலாற்றில் பொருத்திப்பார்க்கும் முயற்சிகள் பெரும்பாலும் இல்லை.
ஆறு, மொழிபெயர்ப்புகளை நம்பும்போதும் அது மூலநூலிலிருந்து நேராகச் செய்யப்பட்ட மொழிபெயர்ப்பு என்றால் குறையில்லை. ஆனால் நாம் ஆங்கில வழியாக வரும் மொழிபெயர்ப்புகளை மட்டுமே நம்பியிருக்கிறோம். உதாரணமாக, மராட்டி மொழிப் படைப்பு ஒன்றுக்கும் தமிழ்ப் படைப்பு ஒன்றிற்கும் ஒப்பீடு செய்ய வேண்டுமானாலும் நாம் மராட்டி கற்றுக்கொண்டு அதைச் செய்வதில்லை. மாறாக, மராட்டிப் படைப்புகளின் ஆங்கில மொழி பெயர்ப்புகளை நம்பி ஆய்வில் ஈடுபட்டு விடுகிறோம்.
ஏழாவது, ஒப்பிலக்கியம், இலக்கியத்தின் பொதுமை என்ற அளவில் கருத்துக் கொண்டு தனித்தன்மைகளை மறுத்துவிடுகிறது. கம்பராமாயணத்துக்கும் வால்மீகி ராமாயணத்துக்கும் கதையில் பெருமளவு ஒப்புமைகளும் உண்டு. கம்பர் தனியே வகுத்துக்கொண்ட நிகழ்ச்சிகளும் உண்டு. ஆனால் கம்பரின் தனித் தன்மைகள், வெறும் நிகழ்ச்சிகள் அளவில் மட்டுமா இருக்கின்றன? அமைப்பு, நடை, மொழித்திறன், கற்பனை என எத்தனையோ வடிவக்கூறுகளில் அல்லவா இருக்கிறது? இரண்டையும் ஒப்பிட வேண்டுமானால், ஒப்பிலக்கியத்தில் இரண் டின் யாப்புகளையும், சொல்லும் முறையையும், கற்பனை நயத்தையும் ஒப்பிட வழியுண்டா?
திறனாய்வுகளிலும் இதே குறைபாடு உண்டு. க.நா.சு. போன்றோரின் மொழிபெயர்ப்புகள் பல நேரடியாகச் செய்யப்பட்டவை அல்ல. அதேபோல, உலகக் கவிதைகளையும் அவற்றின் போக்குகளையும் அறிமுகப்படுத்த முனைந்த பிரம்மராஜனின் மொழிபெயர்ப்புகளும் ஆங்கில வாயிலாகவே செய்யப்பட்டவை. புதுப்புது இலக்கிய இயக்கங்களை அறிமுகப்படுத்த முனைந்தோரின் நிலைமையும் இதுவே. இவ்வாறு சொல்லிக்கொண்டே போகலாம்.
தனித்த விளக்கமுறை ஆய்வுகள், இலக்கியத் தகவோ, வரலாற்று ரீதியான இடமோ அறுதியிடப்படாதபோது பயனற்றுப் போகும். இக்குறைகள் தமிழ் ஆய்வுகளில் களையப்பட வேண்டும். ஒப்பிலக்கியம் பற்றிய பாடநூல்களையும் சிலர் எழுதினர். அவை யாவும் குறையுடையவைகளே. எவ்வகையிலும் சிறப்பானவை அல்ல. இவற்றைப் படித்து ஒப்பிலக்கிய ஆய்வு செய்யத் தெரிந்து கொண்டவர்கள் அநேகமாக இல்லை என்றே சொல்லிவிடலாம்.
மேலும் ஒப்பியல் திறனாய்வு, தனித்தனி இலக்கிய கர்த்தாக்களை ஒப்பிடுவது என்ற நிலையிலிருந்து உயர்ந்து, ஒரு குறிப்பிட்ட இலக்கிய இயக்கத்தை அல்லது சூழலை இன்னொரு இலக்கிய இயக்கத்துடன் அல்லது சூழலுடன் ஒப்பிடுவது என்ற நிலைக்கு உயரவேண்டும். உதாரணமாக, தமிழின் புனைவியல் அல்லது கற்பனாவாத இலக்கியத்தை வங்காளிமொழியின் கற்பனாவாத இயக்கத்துடன் ஒப்பிடவேண்டும். இம்மாதிரி ஆய்வுகள்தான் உண்மையான பயனை நல்கும். இத்தகைய ஆய்வுகள் இன்னும் தமிழில் தோன்ற வில்லை.
ஒப்பிலக்கியம் என்ற துறை குறைபாடுடையது என்றாலும் இன்றைய தேவையாகவும் இருக்கிறது. காலதேச வரையறைகளை மீறி, பண்பாடுகளின் ஊடாகக் காணப்படும் பொதுமைகளையும் தனித்துவங்களையும் காணப் பயன் படுவது ஒப்பிலக்கியமே ஆகும். கலையின் உலகப் பொதுமையை வலியுறுத்திக் குறுகிய மனப்பான்மையினைக் களையக் கூடியதும் ஒப்பிலக்கியமே.

No comments:

Post a Comment